Saturday, March 19, 2016

ஜாமியா நளீமியாவின் இஸ்தாபகர் இலங்கையின் இஸ்லாமிய எழுச்சியின் முன்னோடிகளுள் ஒருவர்(05.10.2007,மீள்பார்வை-இதழ்-137)எம்.என்.இக்ராம்

“அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை உண்மைப்படுத்திய சில ஆளுமைகள் காணப்படுகின்றன.அவர்களில் சிலர் அதனை அடைந்து விட்டனர்.இன்னும் சிலர் எதிர்பாரத்திருக்கின்றனர்.அவர்கள் அதனை முற்றாக மாற்றிவிடமாட்டார்கள்”-அஹ்ஸாப்: 23-
இலங்கை்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான தொடர்பு மிகவும் தொன்மையானது.அது தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டியது.அவ்வகையான ஆய்வுகள் எமக்கு ஒரு செழுமையான வரலாற்றைத் தரலாம்.அதனைத் தாண்டி நமது அண்மைய வரலாற்றை ஒரு முறை மீட்டிப் பார்க்ககையில் நமது வரலாற்றை செழுமைப்படுத்திய நிறைய ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும் கண்டு கொள்கிறோம்.
அறிஞர் தாஸிம் நத்வி,மௌலவி மஸ்ஊத் ஆலிம்,கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்,அறிஞர் ஏ.எம்.ஏ அஸீஸ்...போன்ற பல ஆளுமைகள் நமது அண்மைய வரலாற்றில் நமக்கு தென்படுகின்றனர்.இந்த ஆளுமைகளுக்குள் சற்றும் குறைத்து மதிப்பிட முடியாத ஒருவராகத்தான் நாம் அல் ஹாஜ் நளீம் அவர்களைக் காண்கிறோம்.
1960/70கள் இலங்கையின் வரலாற்றில் முக்கியமான காலப் பகுதி.இலங்கையில் வாழும் பிரதான இனங்கள் தமது தனித்துவத்தை உணர்ந்து கொள்ள ஆரம்பித்த காலப்பகுதி.அக்காலம் இலங்கை முஸ்லிம்களை பொருத்தவரை கல்வி,கலாசாரம்,கொள்கைத் தனித்துவத்தை சமூகத்தளத்தில் சவால்களுக்கு மத்தியில் முன்னெடுப்பு செய்ய வேண்டிய தேவை உணரப்பட்டது.
இக்காலப் பகுதியில்தான் மஸ்ஊத் ஆலிம்,நளீம் ஹாஜியார்,அறிஞர் தாஸிம் நத்வி,ஏ.எம்.ஏ அஸீஸ்,ஹிபதுல்லாஹ் ஹாஜியார்...போன்ற சமூக செயற்பாடடாளர்கள் இலங்கை முஸ்லிம்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் சிந்திக்கத் தலைப்பட்டனர்.முஸ்லிம் சமூகத்தின் கல்விப் பிரச்சினை,பொருளாதாரப் பிரச்சினை,காலாசாரம்,தனித்துவம் சம்பந்தமான பிரச்சினை என அவர்களது சிந்தனைத் தளம் விரிவடைந்தது.
இதே 70 களின் காலப் பகுதியில் சர்வதேச அளவில் இஸ்லாமிய உம்மத் ஒரு எழுச்சிப் போராட்டத்தை முதிரச் செய்து கொண்டிருந்தது.மௌலவி மஸ்ஊத் ஆலிம்,அறிஞர் தாஸிம் நத்வி,அறிஞர் ஏ.எம் ஏ. அஸீஸ் போன்றோரின் சிந்தனைகளை அந்த எழுச்சி அலைகள் பதிக்காமல் விட்டு வைக்கவில்லை.இந்தப் பாதிப்புக்கள் சமூக செயற்பாடுகளுக்காக அவர்களுடன் ஒன்றிணைந்த அனைவரையும் ஈர்த்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
இந்தப் பின்னணியில் இருந்துதான் முஸ்லிம் கிராமங்கள் தோறும் நளீம் ஹாஜியாரால் கட்டப்பட்ட பள்ளிவாயில்களை,வறுமையால் பாதிக்கப்பட்டோருக்கு அவர் கட்டிக் கொடுத்த வீடுகளை,அவரால் செய்யப்பட்ட அவர்களது பிள்ளைகளது கல்வி மற்றும் திருமணங்களுக்கான உதவிகளை...நம்மால் பார்க்க முடிகிறது.(இது இந்தியா வரை வியாபித்துள்ளது)நளீம் ஹாஜியார் உட்பட அவரோடிருந்த சகாக்களால் முன் கொண்டு செல்லப்பட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கப் பணிகள் இவ்வகையில் கூர்மையாகப் பார்க்கப்பட வேண்டியவை.இலங்கை முஸ்லிம் கல்வி வரலாற்றில் ஒரு பெறும் திருப்பு முனையை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் சாதித்தது.
இப்பணிகள் எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற் போல் அல்லது இவ்வாறான பணிகளை சுமக்கும் சமூக செயற்பாட்டாளர்களை பயிற்றுவிக்கும் ஒரு தளமாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ஜாமிஆ நளீமியா.ஜாமிஆ நளீமியா நளீம் ஹாஜியாரும் அவரோடிருந்தவர்களும் முஸ்லிம் சமூகத்துக்காக விட்டுச் சென்ற ஒரு வக்பு சொத்து.
நளீம் ஹாஜியாரினதும் அவரது தோழர்களதும் பணிகள் அனைத்தின் மீதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு பணியாகத்தான் ஜாமிஆ நளீமியாவின் தோற்றம் அமைந்தது.இலங்கை முஸ்லிம்களது அனைத்துத் தளங்களிலும் பாதிப்புச் செலுத்தியுள்ள ஒரு கல்வி நிறுவனமாக ஜாமிஆ நளீமியா இன்று மாறியுள்ளது.அதன் சிந்தனை வீச்சுகள் இலங்கை முஸ்லிம்களையும் தாண்டி தமிழ் பேசும் உலகை நோக்கியும் வியாபிக்கிறது.
நளீம் ஹாஜியாரையும் இலங்கை முஸ்லிம்களையும் சர்வதேச முஸ்லிம் உம்மத்துக்கு அறிமுகம்(அண்மைய காலத்தில்) செய்த இடமாக நாம் ஜாமிஆ நளீமியாவைக் குறிப்பிடலாம்.நளீம் ஹாஜியார் ஞாபகப்படுத்தப் படும் போதெல்லாம் அதனுடன் சேர்த்து நளீமியாவும் மனக் கண் முன் தோன்றும்.அதே போன்று நளீம் ஹாஜியாரின் பங்களிப்புக்கள் பற்றிப் பேசும் போதெல்லாம் அங்கு மஸ்ஊத் ஆலிம்,ஹிபதுல்லாஹ் ஹாஜியார் போன்றோர் அவருடன் சேர்ந்து கொள்கிறார்கள்.இந்த அணியுடன் கலாநிதி சுக்ரியும் இணைந்து கொள்கிறார்.
1980 களின் பின்னால் இலங்கையில் உத்வேகம் பெற்ற இஸ்லாமிய எழுச்சியில் ஜாமிஆ நளீமியாவுக்கும் பல்கலைக் கழக மாணவர் சமூகத்துக்கும் பாரிய பங்களிப்புள்ளது.இந்தப் பங்களிப்பின் வேர்கள் நளீம் ஹாஜியாரையும் அவருடனிருந்த இஸ்லாமிய சிந்தனையாளர்களையும் போய்ச் சேர்கிறது.இது விரிவாக நிகழ்வுகளின் குறிப்புகளுடன் பார்க்கப்பட வேண்டியது.சில போது நாம் இப்படிக் குறிப்பிடுகையில் பலருக்கு வியப்பான கேள்விகள் எழக் கூடும்.ஏனெனில் முற்றத்து மல்லிகை மணப்பதில்லை என்பதுதான் அது.நாம் எப்போதும் அயல் வீட்டையும் அயல் முற்றத்தையும் பார்த்து வியந்து பழகியவர்கள்.நமக்கு நமது பூர்வீகங்கள் எப்போதும் அந்நியமானவை.இந்த அந்நியம் எப்பொழுதும் தொடரக் கூடாது.அது வரலாற்றை விட்டும் நம்மை அந்நியப்படுத்திவிடும்.வரலாற்றில் தோன்றிய ஒவ்வோர் ஆளுமைக்கும் அதேற்கேயுரிய பாத்திரத்தை கொடுக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
மேற்கின் காலனியம் நம்மில் வளர்த்த,நம்மை சிறுமையாகப் பார்க்கும் இந்த மனோ நிலை மோசமானது.தென்னாபிரிக்க மக்கள் தமது வரலாற்று செழுமைகளுடன் காலனித்துவத்தை எதிர்த்து உதைத்தெழும்பியது போல் நாமும் நமது வரலாற்றுச் செழுமைகளுடன் தனித்துவமாய் சிந்திக்க முற்பட வேண்டும்.இங்குதான் நளீம் ஹாஜியாரையும், நமக்குள்ளால் நிகழ்ந்து வரும் இஸ்லாமிய எழுச்சியையும் நாம் எப்படிப் பார்க்க வேண்டும் என்ற பார்வை நமக்கு வெளிச்சமாகிறது.இஸ்லாமிய எழுச்சி என்பது வெறுமனே சிந்தனையின் எழுச்சி மாத்திரமல்ல,அது செயற்பாட்டின் எழுச்சி.அதில் நளீம் ஹாஜியார் போன்றோருக்கும் பெரும் பங்குள்ளது.
நளீம் ஹாஜியார் பணத்தை கொடையாக மாத்திரம் தந்துவிட்டுச் சென்ற ஒரு முதலாளி அல்ல.அவர் ஒரு சிந்தனைப் பாரம்பரியத்தின் முதுகெழும்பாய் இருந்தவர்.நளீம் ஹாஜியார் வாழ்ந்த பூமியும்,அவரது உரைகளும்,அவரது தோழர்களும்,அவர நீர் வார்த்த சிந்தனையும் இதனை எமக்கு தெளிவாய் உணர்த்தும் சான்றுகள்.இந்தச் சான்றுகள் அழிந்து போகாமல் பாதுகாக்கப்பட வேண்டியவை.ஏனெனில்,அவை எமது வரலாறு.எமது வரலாற்றோட்டத்தில் ஒரு திருப்பு முனைக்குக் காரணமாய் அமைந்தவர்தான் நளீம் ஹாஜியார்.எனவேதான் நாம் அவரை அறிவுத் தந்தை என்கிறோம்.அல்லாஹ் அவரையும் அவரது பணிகளையும் பொருந்திக் கொள்ளட்டும்.அவருக்குப் பின்னால் எம்மை அவன் நேர் வழியில் செலுத்தட்டும்.
(நாம் ஒரு முறை வகுப்புத் தோழர்களுடன் வளாகத்தில் இருக்கையில் ஹாஜியார் வந்து நிர்வாகக் கட்டிடத்தின் கீழ் அமர்ந்தார்.அவருடன் உரையாடிக் கொண்டிருந்தோம்...அவரது மரணம் குறித்தே அதிகம் கதைத்தார்...அவரை அடக்கம் செய்யுமாறு நிர்வாகக் கட்டிடத்திற்கு முன்னால் இருந்த ஓர் இடத்தை காண்பித்தார்....அதுட ஹிகமத் என்ன தெரியுமா எனக் கேட்டுவிட்டு...வருபவர்கள் எனக்கு அப்பதான் துஆ செய்வார்கள் என்றார்...இந்த உரையாடிலிடையே ஹாஜியார் நான் இல்லாட்டி இதனை (நளீமியாவை)நீங்கள்தான் பார்த்துக் கொள்ளனும் செய்வீர்கள் தானே என்றார்.அப்போது அவரது பார்வையும் எனது பார்வையும் விபத்தாக நோக்கிக் கொண்டிருந்தன...அந்த வசனங்களின் பாதிப்பு இன்னும் மனதில் ஆளமாய் உள்ளது...எனவேதான்,அவர் மரணித்த போது விபத்துக்குள்ளாகி கால் சுகயீனமுற்றிருந்த போதும் சகோதரர்களின் உதவியுடன் இரவோடிரவாகச் சென்று அவரது ஜனாஸாவை தரிசித்து கப்ருக் குழியிலும் இரங்கிவிட்டு,இரண்டு ரக்காஅத்துக்கள் பள்ளியில் தொழுது பிரார்த்தித்துவிட்டு...ஜனஸாவில் கலந்து கொள்ள முடியாமையால் திரும்பினேன்....
அதன் தொடரில் அந்தக் காலப் பகுதியின் பிற்பாடு...பத்திரிகையில் வேலை செய்யும் காலத்தில் ஹாஜியார் வபாத்தான 27.09.2005 தினத்தின் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பை எழுதி வந்தேன்.ஒரு முறை பத்திரிகையின் பக்கங்களின் உள்ளடக்கமெல்லாம் நிறைவுற்ற பின்னர் ஹாஜியாரைப் பற்றி எழுத வேண்டும் என்ற போது அப்போது மீள்பார்வைக்கு பொருப்பாக இருந்த சகோதரர் சிறாஜ் தனது பத்தியை அதற்காக தந்தார்.2010 பின் அது இடம் பெறவில்லை.நேற்று இரவு வேறோர் தேவைக்காக மீள்பார்வை இதழ்களை புரட்டிய போது ஹாஜியார் பற்றிய கட்டுரைகள் கண்களில் பட்டது.அப்போது,அந்த நினைவுகள் உயிர்த்துக் கொண்டன.இன்று ஹாஜியாரின் நினைவுப் பேருரை இடம் பெற இருக்கிறது என்பதால் அவற்றில் ஒன்றை பதிவிடலாம் என்று இங்கு தருகிறேன்.அவர் பற்றி எழுதிய மற்றைய குறிப்புகளையும் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் காலங்களில் பதிவிட முனைகிறேன்.)

சமூக எழுச்சிக்கான அல்லது மாற்றத்திற்கான இஸ்லாத்தின் செயற்திட்டம்-02 எம்.என்.இக்ராம்

ikrammn@gmail.com
அறிமுகம்
சமூக எழுச்சி அல்லது மாற்றம் குறித்து பேசும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னுமோர் விடயம் காணப்படுகிறது.அது,இந்த விடயத்தில் ஆர்வம் காட்டுவோர் அல்லது ஈடுபடுவோர் தாம் ஏற்படுத்த விரும்புகின்ற மாற்றம் அல்லது எழுச்சி குறித்த முழுமையான வடிவத்தை அல்லது வரைபடத்தை எந்தளவு தூரம் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற விடயம்.சாதாரணமாக ஒரு சிறிய காரியம் அல்லது பயணம் மேற் கொள்பவரிடமே இந்தத் தெளிவு மன வரைபடமாக இல்லாத போது அவரது காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதில் பல இடர்பாடுகளை எதிர் கொள்வார்.ஒரு பயணத்தை மேற் கொள்பவர் பல திக்குகளிலும் திசை மாறி சுற்றிவருவார்.
இந்த வெளிப்பாட்டை நாம் சமூக மாற்றத்திற்காக உழைக்கின்ற செயற்களங்களிளே தெளிவாகக் காண்கிறோம்.இந்தத் தெளிவை சரியாக பெற்ற அணி குறி்த்த ஒரு காலப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நோக்கி பயணிப்பதைக் காண்கிறோம்.அப்படி தெளிவற்ற அணி குறித்த ஒரு வட்டத்தில் செக்குப் போன்று சுற்றிச் சுற்றி இருந்துவிட்டு,அதற்கப்பால் நகர முடியாத போது ஆளுக்கொரு சிந்தனையையும் நாளுக்கொரு திட்டத்தையும் வகுத்து வகுத்து,காலத்தையும் வளத்தையும் சில நியாயங்களை சொல்லிக் கொண்டு வீணடிப்பதைக் காண்கிறோம்.
சமூக விவகாரங்கள் குறித்து சிந்திப்பவர்களுள் பெரும்பாலானவர்கள் உணர்வு பூர்வமானவர்கள்.சமூகத்தின் நிலை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பர்.அதனை மாற்றுவதற்காக செயற்பட வேண்டும் என தூய்மையாக விரும்புவர்.எனினும் சமூகத்தின் நிலை,அதனை மாற்றுவதற்கான முறை,அதற்கான உழைப்பு என்பன குறித்து அறிவு பூர்வமாக சிந்திக்கவோ,திட்டமிடவோ முனைய மாட்டார்கள்.இவர்கள் பல போது சமூக எழுச்சிக்கு தடையான செயல்களை செய்பவர்களாக மாறிவிடுவர்.
இன்னுமோர் சாரார் இருப்பர்,அவர்கள் சமூக விவகாரங்கள்,அதன் நிலைகள் குறித்து அறிவதிலும் அதனுடன் தொடர்புபட்ட வகையில் வாசிப்பதிலும் சிந்திப்பதிலும் ஈடுபடுவர்.எனினும்,அது குறித்து விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்வதற்கோ,அதனடியாக வரும் தீர்மானத்தை வைத்து செயற்படவோ முனைய மாட்டார்கள்.இவர்கள் சமூக எழுச்சிக்கான செயற்பாடுகளை அதிகம் விமர்சிப்பவர்களாகவும்.அதனை எப்போதுமே கருப்புக் கண்ணாடியால் நோக்குபவர்களாகவுமே இருப்பர்.இவர்களும் கூட எழுச்சிக்கு தடைக்கற்களாக மாறிவிடுவர்.
இன்னுமோர் சாரார் இருப்பர் அவர்கள் விவகாரங்களை ஆய்வு பூர்வமாக அனுகுவதுடன் அதற்காக செயற்படவும் செய்வார்கள்.என்றாலும் அவர்களது செயற்பாட்டிற்கும் சமூகத்தின் யதார்த்தமான நிலைக்கும் இடையில் பெரும் இடைவெளி நிலவும்.இவர்களது ஆய்வுகளும் செயற்பரப்பும் தத்துவார்த்த வெளியில் சுழுன்று கொண்டிருக்கும்.
அடுத்த சாரார்தான் யதாரத்தமாக விடயங்களை அனுகி நடைமுறை உலகில் தொடர்ச்சியாக செயற்படக் கூடியவர்கள்.இவர்களால்தான் சமூக மாற்றங்களும் எழுச்சிகளும் சாத்தியப்படுகின்றன.இவர்கள் தொடர்ந்தேர்ச்சியாக சிந்தித்துக் கொண்டும் செயற்பட்டுக் கொண்டுமிருப்பர்.
இந்த விடயத்தை இமாம் ஹஸனுல் பன்னா அவரகள் தனது றஸாஇலில் பின்வருமாறு விளக்குகிறார்
“பேச்சுக்குரிய களம் கற்பனைக்குரிய களத்தைப் பார்க்கிலும் வேறுபட்டது,செயற்பாட்டுக்குரிய களம் பேச்சுக்குரிய களத்தைப்பார்க்கிலும் வேறுபட்டது,போராட்டத்துக்குரிய களம் செயற்பாட்டுக்குரிய களத்தைப் பார்க்கிலும் வேறுபட்டது.சரியான போராட்டக் களம் தவறான போராட்டக் களத்தைப் பார்க்கிலும் வேறுபட்டது.அதிகமானவர்களுக்கு கற்பனை பண்ண முடியும்,எனினும் உள்ளத்தில் தோன்றும் அனைத்துக் கற்பனைகளையும் வார்த்தைகளாக வடிக்க முடியாது.அதிகமானவர்களுக்கு பேச (கதையாடல்)முடியும்.எனினும் செயற்பாட்டின் போது இந்த அதிகமானோரில் குறைந்த தொகையினரே நின்று பிடிப்பர்,இந்த சிறு தொகையில் அதிகமானோருக்கு செயற்பட முடியுமெனினும் அவர்களில் சொற்ப தொகையினரே கடினமான போராட்ட வாழ்வினதும்,தொடர்ந்த செயற்பாட்டினதும் சுமைகளை சுமப்பர்.இந்த தேர்ந்த சிறு தொகைப் போராளிகளும் கூட அல்லாஹ்வின் பராமரிப்பு இல்லாது போனால் பாதையை தவர விட்டு இலக்கை அடைந்து கொள்ள முடியாது போவர்”
குறைந்த இழப்பில் கூடிய விளைவை கொண்டு தரும் தேர்ந்த போராட்டமாக சமூக மாற்றத்திற்கான அல்லது எழுச்சிக்கான செயற்பாடு மாற வேண்டுமாயின் அது பற்றிய சரியான தெளிவுடன் குறித்த செயற்பாட்டை கொண்டு செல்லும் அணி காணப்பட வேண்டும்.அந்த வகையில் முதலில் சமூக மாற்றம் தொடர்பில் பேசும் போது நாம் பயன்படுத்தும் சில சொற்பிரயோகங்கள் பற்றிய தெளிவை முதலில் பெற்றுக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
1. சமூக எழுச்சி அல்லது மாற்றம் என்றால் என்ன?
சமூக எழுச்சி அல்லது மாற்றம் குறித்து பேசும் போது நஹ்ழா(எழுச்சி),ஸஹ்வா(எழுச்சி),தஃயீர்(மாற்றம்),இஸ்லாஹ்(சீர்திருத்தம்),தஜ்தீத்(புணர் நிர்மானம்) போன்ற பிரயோகங்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.உண்மையில் இந்த சொற்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட செயன்முறைப் பரப்பபை கொண்டதாகக் காணப்படுகிறன.
‘நஹ்ழா’ என்ற சொல் மொழி ரீதியாக பலம்,சக்தி,அதிக இயக்கம்,எழுந்து நிற்றல்,முன்னோக்கிச் செல்லல் போன்ற கருத்துக்களை குறிக்கும்.லிஸானுல் அரப் இதனை குறித்த ஓரிடத்திலிருந்து எழுந்து செல்லல் என குறிப்பிடுகிறது.அதாவது ஒரு நிலையிலிருந்து இன்னோர் நிலைக்கு நகருதல்,இடத்தையும் தோற்றத்தையும் மாற்றுதல் என குறிப்பிடலாம்.அதனை தேங்கி பின்னடைந்திருந்த நிலைக்குப் பிறகு எழுந்து முன்னோக்கிச் செல்லுதல் எனக் கொள்ளமுடியும்.எனவேதான் இதனை நாம் தமிழில் எழுச்சி எனக் குறிப்பிடுகிறோம்.நாம் எழுச்சி எனக் குறிப்பிடும் போது அது மனவெழுச்சி,கிளர்ச்சி நிலை என்பதற்கப்பால் செயற்பரப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடு என்பதனை இங்கு தெளிவாக விளங்கிக் கொள்கிறோம்.அந்த வகையில் ஒரு சமூகம் தான் இருக்கின்ற பின்தங்கிய நிலையிலிருந்து எதிர்பார்க்கப்படும் சிறந்த நிலையை நோக்கி செல்வதற்காக அதனது சிந்தனை,செயற்பாடு,பலம் என அதன் தற் போதைய நிலையிலிருந்து மாறிச் செல்கின்ற,எழுந்து கொள்கின்ற செயற்பாட்டையே நாம் இங்கு எழுச்சி என்கிறோம்.
இங்கு இந்த சொல்லை நாம் பயன்படுத்தும் போது இன்னுமோர் பின்னணியையும் விளங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பிரயோகம் ஐரோப்பாவில் கி.பி14ம் நூற்றாண்டு முதல் கி.பி 17 வரை ஏற்பட்ட கிறிஸ்த்தவத்தின் அடக்கு முறைக்கெதிரான அறிவியல் எழுச்சியை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகும்.இந்த வகையில் 'எழுச்சி' என்பதனை மதத்தை விட்டு தூரமான சிந்தனா ரீதியான செயற்பாடாகவும் மற்றும் நடைமுறையிலுள்ள அனைத்தையும் புறக்கணிக்கும் செயற்பாடாகவும் என ஐரோப்பிய பின்னணியில் நோக்குவதுண்டு.
நாம் இங்கு இந்த சொல்லை பிரயோகிப்பது இஸ்லாமிய பின்புலத்திலிருந்தாகும்.இதனை அறிஞர் மாலிக் பின் நபி, கலாநிதி ஜாஸிம் ஸுல்தான்,அப்துல் ஹமீத் அல்-கஸ்ஸாலி…போன்ற இஸ்லாமிய எழுச்சி செயற்பாட்டை ஆய்வு ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நோக்கிய பலரும் இஸ்லாத்தின் சமூக மாற்ற வேலைத்திட்டத்தை குறிப்பதற்காக இஸ்லாமிய பின்புலத்திலிருந்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த சொல்லைப் பற்றி பேசும் போது,இதே கருத்தில் முற்றிலும் இஸ்லாமிய பின் புலத்திலிருந்து பாவிக்கப்படுகின்ற 'ஸஹ்வா' என்ற சொல்லையும் இங்கு தொடர்பு படுத்தி விளங்கிக் கொள்வது பொருத்தமாகும்.இஸ்லாமிய எழுச்சியை குறிப்பதற்கான இந்தப் பிரயோகம் 20ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு பிரயோகமாகும்.இது தூக்கத்திலருந்து விழித்தல்,போதையிலிருந்து விழித்தல்,வானில் மேக மூட்டமற்ற நிலை..என மொழி ரீதியாக கருத்துக் கொடுக்கிறது.இதனை பிரயோகத்தில் நவீன காலத்தில் முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய ரீதியாக எழுச்சியடைந்தமையை குறிக்க பயன்படுத்துவர்.அப்படி பயன்படுத்துவோரில் பலர் அவ்வெழுச்சியை இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹாபின் செயற்பாட்டிலிருந்து துவங்குவர்.சிலர் அதனை இஸ்லாமிய எழுச்சி சர்வதேச ரீதியாக சமூகமயப்படத்துவங்கிய 1970 பதுகளிலிருந்து துவங்குவது பொருத்தம் எனக் குறிப்பிடுவர்.இன்னும் சிலர் இச்சொல் எழுச்சி செயற்பாட்டை மொத்தமாக குறிக்க பொருத்தமற்றது என மொழி ரீதியான பிரயோக நிலையிலிருந்து குறிப்பிடுவர்.இது எழுச்சி செயன் முறையின் ஆரம்ப செயல் நிலை என எழுச்சி செயற்பாட்டை ஆய்வு ரீதியாக விளக்க முற்பட்டவர்கள் இதனை அடையாளப்படுத்துவர்.ஸஹ்வா என்ற பிரயோகத்தை ஆரம்ப செயல் நிலையாக பார்ப்பதே அதன் மொழி ரீதியான உள்ளடக்கத்தை வைத்துப் பார்க்கும் போது பொருத்தமானதாகும். எனினும் இஸ்லாமிய இலக்கியப் பரப்பில் இச் சொல் நஹ்ழா என்ற சொல் குறிக்க வருகின்ற பரப்பை குறிப்பதற்காக பெருமளவில் பாவிக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் இங்கு மனதில் கொள்வதுவும் அவசியமாகும்.
அடுத்து இப்பரப்பில் பயன்படுத்தப்படும் சொற்பிரயோகம்தான் ‘தஃயீர்’ என்ற சொல்.இது,ஒன்றை ஒரு நிலையிலிருந்து இன்னோர் நிலைக்கு மாற்றுதல்,இதற்கு முன்னர் இல்லாத ஒன்றை ஏற்படுத்தல்,ஒன்று சீர் பெறுவதற்காக இருக்கின்ற நிலையை மாற்றி வைத்தல் போன்ற பொருள்களைக் கொடுக்கும்.இங்கு,இந்த சொல் மாற்றம் எனும் போது ஒன்றின் அடிப்படை அப்படியே இருக்க தோற்றம் மாறுவதையும் குறிக்கும்.அதே போல் ஒன்று முழுமையாக மாற்றத்துக்குட்படுவதையும் குறிக்கும்.இந்த இரண்டு கருத்தையும் குறிக்கும் வகையில் குர்ஆன் இச் சொல்லை பாவித்துள்ளது.சமூகமாற்றத்திற்கான அடிப்படை விதியை குர்ஆன் இச் சொல்லை பயன்படுத்தியே விளக்குகிறது.“அல்லாஹ் ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றாதவரை அவர்களை மாற்றமாட்டான்”.இந்தச் சொல்லும் சமூக எழுச்சி அல்லது மாற்றம் என்ற பரப்பில் காணப்படும் செயன்முறைத் தொடரில்(Process) ஒரு பகுதியை குறிக்கின்றது.எனினும் மொத்தச் செயன்முறையும் ஏதோ ஒரு வகையில் மாற்றம் என்ற செயலுடன் தொடர்புருவதால் மொத்தமாகவும் இதனைப் பயன்படுத்த முடியுமெனினும் ஒரு போதாமை உணரப்படவே செய்கிறது.ஏனெனில் சில மாறா அடிப்படைகளும்,மாற்றத்தை வேண்டாத பகுதிகளும் சமூக எழுச்சிச் செயன்முறையில் காணப்படலாம்.
அடுத்து,‘இஸ்லாஹ்’ என்ற சொல்லும் ‘தஜ்தீத்’என்ற சொல்லும் இப்பரப்பில் பயன்படுத்தப் படும் பிரயோகங்களுள் முக்கியமானவையாகும்.இஸ்லாஹ் என்ற சொல் பஸாத்(சீர் கேடு)என்பதன் எதிர் பதமாகும்.இது ஒன்றை சீர்படுத்தல்,ஒன்றிலிருக்கும் சீர்கேடுகளை,மோசமானவற்றை அகற்றல்,ஒன்றின் சீரான நிலையை தொடர்ந்து பேணல்,ஒன்றை சிறப்பாக தயார்படுத்தல்… எனப் பொருள்படும்.இது இரண்டு விடயங்களுக்கிடையிலான அல்லது இருவருக்கிடையிலான பொருத்தப் பாடின்மைகளை நீக்குதல் என்ற கருத்தில் இருவருக்கிடையே அல்லது இரண்டு விடயங்களுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.இந்தப் பின்னணியில் குர்ஆனும் இச் சொல்லை சமூக சீர் திருத்த செயற்பாடு,இருவருக்கிடையே சமரசம் செய்தல்..போன்ற கருத்துக்களில் பயன்படுத்தியுள்ளது.இதனையும் எழுச்சி செயன்முறையில் காணப்படும் ஒரு தன்மை வாய்ந்த செயற்பரப்பை குறிக்கும் ஒரு சொல்லாகக் காணலாம்.அடுத்து இதனுடன் தொடர்பாக குறிப்பிடப்படும் அடுத்த சொற்பிரயோகம்தான் தஜ்தீத் எனும் புதுப்பித்தல், புணரிநிர்மாணம் செய்தல்,பழமைப்பட்டு,இத்துப்போன நிலையிலிருந்து அடிப்படை நிலைக்கு கொண்டுவருதல்…என்ற கருத்தைக் கொடுக்கும் சொல்லாகும்.இந்த சொல் மார்க்கத்தை புணர் நிர்மாணம் செய்தல் என்ற கருத்தில் நேரடியாக ஹதீஸில் பாவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியப் பரப்பில் மார்க்கத்தின் சிந்தனா,பிரயோக நிலைகளில் வருகின்ற தொய்வினை நீக்கி பழைய நிலைக்கு செம்மைப்படுத்தல் என்ற பரப்பில் பாவிக்கப்பட்டுள்ளது.இது பெரும்பாலும் மார்க்கத்தின் பிரயோக நிலைச் சிந்தனைகளில் ஏற்படுத்தப் படும் கால இடப் பொருத்தமான மாற்றங்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது என சிலர் கருதுவர்.இன்னும் சிலர் இது மொத்த மாற்றப்பரப்பையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது எனக் குறிப்பிடுவர்.
இதேபோன்று,இஹ்யாஉ(உயிர்ப்பித்தல்),இஆததுல் பினாஃ(மீளக் கட்டியெழுப்பல்),தன்மியா(அபிவிருத்தி)…போன்ற சொற்களும் இப்பரப்பில் பயன்படுத்தப்படுகின்றன.எனினும் நஹ்ழா என்பதன் மூலம் நாடப்படும் எழுச்சி என்ற பிரயோகம்,அதனுடன் தொடர்பான அனைத்துப் பிரயோகங்களையும் ஒன்று சேர்த்துக் கருத்துக் கொடுப்பதை அவதானிக்கலாம்.
இங்கு நாம் பேச வருகின்ற தலைப்பை புரிந்து கொள்ள இந்த பிரயோகங்களை விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.காரணம் மொழி சிந்தனைகளையும்,கருத்துக்களையும்,செயற்பாடுகளையும் வடிவமைக்கிறது.இந்தப் பிரயோகங்களை நாம் விளக்கியது போன்று மேலோடட்டமாக விளங்கும் போதே சமூக எழுச்சிப் பரப்பில் இடம் பெறும் வாதப் பிரதிவாதங்களின் பின் புலங்களை ஓரளவு விளங்கிக் கொள்ள முடியுமாக இருக்கும்.இங்கு நாம் இதனை விளக்கியமைக்கு, அத்தகைய வாதப் பிரதிவாதங்களுக்கு வெளியில் நின்று சரளமாக இத்தலைப்பை சாதாரண வாசகர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதுவும் ஒரு நோக்கமாகும். அதே நேரம் இப்பரப்பில் விவாதிப்பவர்கள் தெளிவுடன் இதனை அணுகுவதற்கு வசதியளிக்கும் என்பது அடுத்த நோக்கமாகும்.
உண்மையில் அல்-குர்ஆன் நபிமார்கள் மேற் கொண்ட பணியை விளக்க,தஃவா,இஸ்லாஹ்,ஜிஹாத்,கிதால்,தப்ஷீர்,தன்தீர்,அம்ரு பில் மஃரூப்,அன்நஹ்யு அனில் முன்கர்,தஃயீர்,தன்வீர்,ஸிராஜ்…என பல பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளது.இவை அனைத்தினூடாகவும் சிறந்ததோர் மனித நாகரிகத்தை கட்டியெழுப்ப அவர்கள் உழைத்தார்கள் என குர்ஆன் விளக்கும்.
அந்த வகையில்,இன்று உலக அளவிலும் சரி,தேசிய அளவிலும் சரி,சமூக மட்டத்திலும் சரி மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டம் ஒரு நாகரீகத்தை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடாகும்.அதனை நாம் சாதாரணமாக சிந்தனைகளை பேசுவதன் ஊடாகவோ,கருத்துக்களை வாதிப்பதனூடாகவோ மாத்திரம் செய்து விட முடியாது.அது ஒரு நாகரீகத்தை உருவாக்கும் பணி.மாலிக் பின் நபி தனது ஷுரூதுன் நஹ்லா என்ற நூலிலே,“தான் அந்த நூலை எழுதும் போது உடகார்ந்திருக்கும் அறையில் ஒரு சிலதைத் தவிர அனைத்துமே மேற்கு நாகரிகத்தின் உற்பத்திகளாகக் காணப்படுகின்றன.நாகரீகங்கள்தான் உற்பத்திகளை மேற் கொள்கின்றன.நாம் உற்பத்திகளால் நாகரீகங்களை வடிவமைக்க முடியாது.நாம் இன்னோர் நாகரிகத்திலிருந்து அனைத்தையும் வாங்க முடியாது.நாம் மனிதனையும் + மண்ணையும் + நேரத்தையும் வைத்து +2 இஸ்லாமிய மார்க்க சிந்தனை எனும் சாந்தைக் குழைந்து = நமது நாகரிகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.அதுதான் எமக்கான உற்பத்திகளை தரும் ” எனக் கூறுவது போன்று ஒரு பாரிய பணி.எனவே,அதனை மேற்கொள்வதற்கு ஒரு பாரிய வேலைத்திட்டம் தேவை.அது எப்படி அமையலாம் என்பதை அடுத்து வரும் அமர்வுகளில் கலந்துரையாடலாம், இன்ஷாஅல்லாஹ்.

சமூக எழுச்சிக்கான அல்லது மாற்றத்திற்கான இஸ்லாத்தின் செயற்திட்டம்-01 எம்.என்.இக்ராம்

ikrammn@gmail.com
ஆரம்பமாக
முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை இஸ்லாத்துடனான தனது உறவை சம்பிரதாய பூர்வமாக மட்டுப் படுத்திக் கொண்டு,தானுன்டு தனது வயிறும் வாழ்வுமுண்டு என்ற அளவில் சுருக்கிக் கொண்ட ஒரு சூழலில்,இஸ்லாத்திற்காக,அதன் இலக்குகளுக்காக செயற்பட முனைகின்ற போது,அதற்காக செயற்படும் கணக்கிடத்தக்க ஒரு சிலரும் இஸ்லாத்திற்காக உழைத்தல் என்பது எது?எப்படி என்ற தத்துவார்த்த சர்ச்சைகளுக்குள்ளால் இருந்து தசாப்தங்களாக வெளிவராத ஒரு சூழல் காணப்படுகிறது.இது சுபமானதா அல்லது அசுபமானதா என்பதற்கு அப்பால் இஸ்லாத்தின் இலக்குகளை நோக்கி எமது வாழ்வை வடிவமைப்பதில் ஒரு சிக்கலான சூழலை தோற்றுவித்துள்ளது எனக் குறிப்பிடலாம்.
இத்தகைய சிக்கலான சூழ்நிலை வரலாற்றில் பல கட்டங்களிலும் ஏற்பட்டதுண்டு.இத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம் தத்துவார்த்த வாதப்பிரதிவாதங்களைத் தாண்டி இஸ்லாத்தின் செயற்பரப்பை எளிமையான வடிவங்களால் விடுவித்த சீர்திருத்த செயற்பாடுகள்தான் நிலைபேறான மாற்றங்களை கொண்டு வந்திருப்பதைக் காணலாம்.இதற்கு உமர் இப்னு அப்துல் அஸீஸ்(றஹ்) அவர்களின் சீர்திருத்த முயற்சிகளையும் இமாம் ஹஸனுல் பன்னாவின் சீர்திருத்த முயற்சிகளையும் இரு வேறுபட்ட தளங்களில் இருந்து உதாரணமாகக் குறிப்பிட முடியும்.
இங்குதான் இஸ்லாத்திற்கான உழைப்பு எமது நாட்டைப் பொருத்த வரையில் ஒரு சிக்களில் கட்டுண்டு போயிருப்பதாக நாம் குறிப்பிடுகிறோம்.இதனை நாம் சிந்தனைச் சிக்கல் என்று குறிப்பிடுவதுவா?செயற்பாட்டுச் சிக்கல் என்று குறிப்பிடுவதுவா? என்பது விளங்கவில்லை.
இதனை இலகுவாகச் சொல்வதென்றால்,இஸ்லாத்திற்கான உழைப்பு அல்லது அதன் இலக்குகளை வாழ்வில் செயற்படுத்துவதற்கான உழைப்பு எங்கிருந்து துவங்கப் பட வேண்டும்?அது எதனை முதன்மைப்படுத்த வேண்டும்?அதன் பரப்பெல்லைகள் யாவை? என்பன பல தசாப்தங்களாக தத்துவாரத்த ரீதியாக இஸ்லாத்திற்காக உழைக்க முனையும் பலரும் எழுப்புகின்ற வினாக்கள்.இங்கு பிரச்சினை என்னவென்றால்,இந்த வினாக்களுக்கு பலரும் புத்தகங்களின் பக்கங்களிலிருந்து விடை தேட முயன்று ஈற்றில் சலித்துப் போய் விடை தெரியா பரப்பில் உலாவிக் கொண்டிருப்பர் அல்லது களத்திருந்து ஓய்ந்து போவர்.
இங்கு இஸ்லாத்தினை முன்நிறுத்தி உழைத்த பலரதும்,பல அமைப்புகள் நிறுவனங்களதும் அனுபவங்களை கோர்த்துப் பார்க்கின்ற போது,எல்லோரும் ஒன்றுபடுகின்ற ஒரு புள்ளியை நாம் இணம் காண முடியுமாக இருக்கிறது.அதுதான் இஸ்லாமிய ஆளுமைப் பிரச்சினை என்பது.இதனை சரியாகச் சொல்வதென்றால்,எல்லாரும் சொல்கிறார்கள்தான் ஆனால்,அவரது வாழ்வில் அதனைக் காண முடியவில்லை என்ற அங்களாய்ப்பு.இது இதனை உணர்கின்றவர்களிடத்திலுமிருக்கிறது.உணராதாரிடமும் உள்ளது.இதனை இன்னோர் வடிவில் சொன்னால் பிறழ்வாளுமைப் பிரச்சினை.
கசப்பாக இருந்தாலும் அனைவராலும் உணரப்படுகின்ற, பரிமாறப் படுகின்ற ஒரு முதன் நிலைப் பிரச்சினையாக இது காணப்படுகிறது.எனினும் அனைவரும் மிக இலகுவாக கடந்து போய் தமக்கான ஒரு சௌகரிய வட்டத்தில் வாழ்வதற்காக இதனை கிடப்பில் போற்று விடுகின்றனர்.இதனை மறப்பதற்கும் மறைப்பதற்கும் சிந்தனா, தத்துவ சர்ச்சையில் மூழ்கி மிதப்பதை ஆசுவாசமாகக் கருதுகின்றனர்.இதனால்,காலாகாலமாக இந்தப் பிரச்சினை அப்படியே இருந்து கொண்டிருக்கும் அதே வேலை இஸ்லாத்திற்கான உழைப்பும் ஒரு வட்டத்தைத் தாண்டி மேலே போகாமல் திண்டாடிக் கொண்டிருக்கும்.
இதனை அல்-குர்ஆன் மிக எளிமையாகக் குறிப்பிடுகிறது. “அல்லாஹ் ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றாதவரை அவர்களை மாற்றமாட்டான்”.இந்தக் கருத்தை ஷஹீத் செய்யித் குதுப் அவர்கள் தனது ஹாதத் தீன் என்ற நூலில் குர்ஆனின் இதே எளிமையுடன் விளக்குகிறார்கள்.இஸ்லாம் என்பது மனித சமூகத்திற்கான தெய்வீக வழிகாட்டல்.அதனை மனிதர்கள் எவ்வளவு தூரத்திற்கு தம்மிலும்,தம்மைச் சூழவும்,தாம் வாழும் சூழலை,தமது சக்தியை,வளங்களை கருத்திற்கொண்டு பிரதிபலிக்கிறார்களோ அந்தளவிற்கு அது வெற்றி பெறும்.அதே நேரம் அதற்கான உழைப்பு என்பது அவர்களும் மார்க்கமும் சந்திக்கின்ற புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும்.அது அவர்கள் எந்த எல்லை வரை செல்கிறார்களோ அதுவரை அவர்களை அழைத்துச் செல்லும்.
இதுதான் எமது சமூக மாற்றத்திற்கான அல்லது சீர்திருத்தத்திற்கான அல்லது எழுச்சிக்கான வேலைப் பரப்பை அடையாளப்படுத்தும் எளிய வார்த்தைகள்.இங்கு வார்த்தை மேதமைகளோ,தத்துவார்த்த மயக்கங்களோ கிடையாது.செயற்பாட்டாளர்களுக்கான இடைவெளி மாத்திரமே காணப்படுகிறது.இங்குள்ள கேள்வி,ஒரு ஆரம்பப் பள்ளி ஆசானைப் போன்று பிள்ளைகளிடம் தானும் படித்து பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லிக் கற்பித்து அவர்களை சிக்களற்ற, வெளிப்படைத் தன்மையுள்ள ஆளுமைகளாய் வடிவமைக்கும் நிதானம் கொண்ட அந்த சிற்பிகள் யார் என்பதுதான்.

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...