குடும்ப வாழ்வு

          முன்மாதிரி இஸ்லாமியக் குடும்பம்

            குடும்ப வாழ்வு-எங்கிருந்து துவங்குவது?
எம்.என்.இக்ராம்
 முஸ்லிம் சமுகத்தில் சிந்தனா ரீதியாகவும் நடைமுறையிலும் மொத்தமாகவே பாதிப்புக்குட்பட்ட இரு விடயங்கள் காணப்படுகின்றன.அவைதான் இஸ்லாமிய குடும்ப வாழ்வும் பொருளாதார முறையும்.இவை இரண்டிலும் நடைமுறை எப்படிப் போனாலும் அவை பற்றிய அடிப்படையான இஸ்லாமிய கருத்துக்களே முஸ்லிம்களால் அந்நியமாய் பார்க்கப்படும் அளவு இன்று நிலமை மாறிப் போயுள்ளது.
 அந்த வகையில் இஸ்லாமிய பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு முயற்சிகள் இடம்பெற்றுள்ளன,இடம் பெற்று வருகின்றன.ஆனால்,குடும்ப வாழ்வு சம்பந்தமான கவனயீர்ப்பு இன்னும் எமது மரபு சார்ந்த பின்னல்களுக்குள்ளிருந்து வெளிவராது திணரிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.அடுத்து எமது குடும்பங்களில் இஸ்லாம் குடும்ப வாழ்வு சம்பந்தமாகக் கூறும் அடிப்படையான அம்சங்களைக் கூட காணமுயாதளவு குடும்ப வாழ்வு சிதறி சின்னாபின்னமாகிப் போயுள்ளதை நாம் காணலாம்.
   இஸ்லாமிய குடும்ப வாழ்வை உருவாக்குவதற்கான முயற்சியை எங்கிருந்து துவங்குவது என்பது சிக்கலான ஒரு விடயமாக மாறியுள்ளது. ஒரு நல்ல மனைவியை, கணவனை தெரிவு செய்தல் என்ற நிலையிலிருந்து ஆரம்பிப்போம் என்றால், அவர்களை சிதறிப்போன இந்தக் குடும்பங்களில் இருந்து தான் தெரிவு செய்தாக வேண்டும் என்பது ஒரு கசப்பான உண்மையாகும். அவர்கள் இந்த சிதரிய குடும்பங்களினதும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ள இந்த சமூகத்தினதும் குறைந்த பட்சமான பாதிப்பிலிருந்தாவது விலகியிருப்பார்கள் என்று எம்மால் உறுதியாகக் கூற முடியாது.
    இங்கு தான் இஸ்லாமிய சீர்திருத்த செயற்பாடுகள் பற்றி நாம் கவனம் செலுத்த வேன்டிய தேவை எழுகிறது. இஸ்லாமிய குடும்ப உருவாக்கம் என்ற செயற்பாடு இஸ்லாமிய சீர்திருத்த செயற்பாடுகளுடன் இணைந்த வகையிலேயே இடம் பெறுதல் வேண்டும். அப்போது தான் நாம் எதிர்பார்க்கும் அடிப்படையில் இஸ்லாமிய சமூகத்தின் சீரான இயக்கத்தில் பங்களிப்பு செய்யும் வகையிலான  குடும்பங்கள் தோற்றம் பெறும். இஸ்லாமிய சீர்திருத்தப் பணியின் மூலம் உருவாக்கப்படும் ஆணும் பெண்ணும் தான் அந்தக் குடும்பத்தின் அடிப்படையாக இருப்பர்.                                                      
   இவ்வகையில் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் இது தொடர்பாக முன்வைத்த சிந்தனைகளில் இருந்து நாம் இப்பத்தியை ஆரம்பிக்க விரும்புகிறோம். அது எமது குடும்பங்களை சீர் படுத்திக் கொள்வதில் எமக்குத் தெளிவான வழிமுறையைக் காட்டித்தரலாம்.
நாம் என்ன விரும்புகிறோம்?                                        நாம் முதலில் விரும்புவது; ஆன்மாக்களின் விழிப்பை, உள்ளங்களின் உயிர்பை, உணர்விலும் சிந்தனையிலும் ஏற்படும் உண்மையான எழுச்சியை…. நாம் பலம் மிக்க, இளைய உள்ளங்களை விரும்புகிறோம். புத்துணர்வு பெற்ற, செயலூக்கம் கொண்ட உள்ளங்களை விரும்புகிறோம். கொழுந்து விட்டெரியும் ரோசமுள்ள உணர்வுகளை விரும்புகிறோம். உயர்ந்த இலட்சியத்தையும் இலக்கையும் வரயறை செய்து அதை நோக்கி செயற்பட்டு அதனை அடைந்து கொள்கின்ற வகையில் அமைந்த சிறந்த கனவுகளை, ஆசைகளை விரும்புகிறோம்.
  இந்த இலக்குகளும் இலட்சியங்களும் வரையறை செய்யப்பட வேண்டும். இந்த உணர்வுகளும் சிந்தனைகளும் நெறிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.இவை ஒரு கொள்கையாக,நம்பிக்கையாக மாறும் வகையில் ஒன்றுகுவிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அங்கு வாதாட்டங்களோ,சந்தேகங்களோ தோன்றக் கூடாது. இந்த வரையறைகள் இன்றி இது போன்ற எழுச்சி ஒரு பெரும் வெட்ட வெளியில் பாய்ச்சப்பட்ட சிதறிய ஒழிக்கீற்றுக்கள் போன்றிருக்கும். அதில் வெளிச்சம் இருக்காது, வெப்பம் இருக்காது.
             இந்த விழிப்புணர்வு அல்லது எழுச்சி தனது செயற்பாட்டை தனி மனிதனில் மேற்கொள்ளும். அப்போது அவன் இஸ்லாம் தனி மனிதனில் விரும்புகின்ற பண்புகளைப் பெற்ற ஒரு சிறந்த தனிமனிதனாக இருப்பான். இஸ்லாம் தனிமனிதனில் அழகையும் அசிங்கத்தையும் பிரித்து உணர்கின்ற உணர்வை ஏற்படுத்த விரும்புகின்றது. சரியானதையும் தவறானதையும் பிரித்தறியும் திறனை ஏற்படுத்த விரும்புகிறது. சத்தியத்தின் முன்னால் பலவீனப்பட்டு நலிந்து போகாத உறுதியான செயற்திறன் மிக்க ஆழுமையை ஏற்படுத்த விரும்புகிறது.
      இந்த தனிமனித சீர்திருத்தத்தின் பாதிப்பு அவரது குடும்பத்தில் ஏற்படும். குடும்பம் என்பது தனிமனிதர்களின் சேர்க்கையால் ஆன ஒரு நிறுவனம். அக்குடும்பத்திலுள்ள குடும்பத்தலைவன் திருந்தி விட்டால் அங்குள்ள பெண்ணும் திருந்திவிடுவாள். அவர்கள் இருவரும் தான் குடும்பத்தின் தூண்கள். அவர்களிருவராலும் இஸ்லாம் இட்டுள்ள அடிப்படைகளின் மீதமைந்த ஒரு வீட்டை உருவாக்க முடியும்.
இஸ்லாம் குடும்பத்திற்கான அடிப்படைகளை சீராக முன்வைத்துள்ளது.திருமணத்தின் போது சிறந்த துணையை தெரிவு செய்ய வழி காட்டியுள்ளது. கணவன் மனைவியருக்கிடையிலான பிணைப்பை ஏற்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழிமுறைகளை தெளிவுபடுத்தியுள்ளது. இருவருக்குமிடையிலான கடமைகளையும் உரிமைகளையும் வரையறை செய்துள்ளது. இஸ்லாம் இரு தரப்பினருக்கும் இந்தத் திருமண இணைப்பின் விளைவாக வரும் பிள்ளையை அப்பிள்ளை முதிர்ச்சியடையும் வரை பொடுபோக்காக இல்லாமல் கண்காணிப்பது கடமை என்று கூறுகிறது. இந்த திருமண வாழ்வின் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு மிக நுணுக்கமான தீர்வுகளை முன்வைத்துள்ளது. இது பற்றிய எல்லா விடயங்களிலும் தீவிரமோ கவனயீனமோ இல்லாது நடுநிலையான ஒரு வழிமுறையை கையாண்டுள்ளது.
    எனவே, குடும்பம் சீரடைந்து விட்டால் சமூகம் சீரடைந்து விடும். சமூகம் என்பது இந்தக் குடும்பங்களின் சேர்க்கைதான். உண்மையில் குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம். சமூகம் என்பது ஒரு பெரியகுடும்பம்.
     நாம் இஸ்லாமிய தனிமனிதனை விரும்புகிறோம்இஸ்லாமியவீட்டை விரும்புகிறோம்இஸ்லாமிய சமூகத்தை விரும்புகிறோம்என்றாலும் அவையெல்லாவற்றுக்கும் முன்னால் இஸ்லாமிய சிந்தனை பரவ வேண்டும் என்று விரும்புகிறோம், அதன் மூலம் சமூகத்தின் எல்லா இடங்களிலும் இஸ்லாத்தின் பாதிப்பு ஏற்பட வேண்டும். சமூகத்தின் எல்லா விடயங்களும் இஸ்லாமிய சிந்தனையால் வழிநடாத்தப்படவேண்டும். அது இல்லாமல் நாம் ஒன்றையும் சாதிக்க முடியாது.
  நாம் அனைவரும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எல்லா விடயங்களையும் மேற்கின் வரையறைகளுக்குள்ளால் நின்று, போக்குகளுக்குள்ளால் நின்று பாரம்பரியமாக சிந்திக்கும் நிலையிலிருந்து நாம் மாற வேண்டும்.
   நாம் வரலாற்றில் சிறப்பாகவும் கண்ணியமாகவும் வாழ்ந்த ஒரு சமூகத்தை பின்னணியாகக் கொண்டவர்கள் என்ற வகையில் தனித்துவமான பெறுமானங்களையும் ஆளுமைகளையும் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும்  என்று விரும்புகின்றோம்.

    இன்ஷாஅல்லாஹ் அடுத்த பத்தியில் இந்த சிந்தனையை எப்படி நடைமுறைப்படுத்தலாம்?அதற்கு முன்னுள்ள சவால்கள் என்ன?அவற்றை எவ்வாறு எதிர் கொள்வது? என்பது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடுவோம்.

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...